ஜூன் 25.. அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்.. அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

Su.tha Arivalagan
Jul 12, 2024,05:07 PM IST

டெல்லி: ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. காரணம், 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதிதான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை (மிசா) பிரகடனப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.




இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமித்ஷா போட்டுள்ள பதிவில், 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனப்போக்கால், அவசர நிலை சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, ஜனாநயகத்தின் ஆத்மாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். லட்சக்கணக்கான மக்கள் காரணமே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீடியாக்களின் குரல் நெரிக்கப்பட்டது.


இந்த தினத்தை ஆண்டுதோறும் அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார் அமித்ஷா.


கடந்த பத்து வருடமாக இருந்து வரும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்த முக்கியமான குற்றச்சாட்டே அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்பதுதான். சமீபத்தில் 3வது முறையாக மோடி அரசு பதவியேற்ற பின்னர், புதிய எம்.பிக்கள் பதவியேற்பின்போது கூட காங்கிரஸ் எம்.பிக்கள் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவியேற்றனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதே அரசியல் சாசனத்தை பாஜகவும் கையில் எடுத்து காங்கிரஸுக்கு நெருக்கடி தர முனைவதையே இந்த புதிய அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்பு வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


ஏற்கனவே இந்தியா என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டபோது அதற்கு எதிராக பாஜக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவை அப்படியே மறைந்து போய் விட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கையில் எடுத்துள்ள அரசியல் சாசன முழக்கத்திற்கு பதிலடியாக பாஜகவும் அரசியல் சாசன படுகொலை என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.