விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா?.. 3வது கட்டமாக இன்று பேசுகிறது மத்திய அரசு

Meenakshi
Feb 15, 2024,03:58 PM IST

புதுடில்லி: டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் இரண்டு கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 3ம் கட்ட பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.


குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர். மத்திய அரசிற்கும், விவசாயிகளுக்கும்  இடையே ஆன முந்தைய இரண்டு பேச்சு வார்த்தை பலன் தராத நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் தங்களது  எதிர்ப்பு பேரணியை தொடங்கினர். 


முதல் நாளில் நடத்தப்பட்ட பேரணிகளில் ஆங்காங்கே போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட போதும் கூட, பேரணி தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தது. விவசாயிகளின் பேரணியை தடுக்க டெல்லி எல்லைகளில், காவல்துறை குவிக்கப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதற்கு, தடுப்புகளும், முள்வேலிகளும் அமைக்கப்பட்டன.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




விவசாயிகளை தடுத்து நிறுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் தடுத்துப் பார்த்து வருகின்றனர். டிரோன்கள் மூலமும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அதைத் தகர்க்க பட்டங்களை விட்டு விவசாயிகள் பதிலடி கொடுக்கின்றனர். கிட்டத்தட்ட ஏதோ இரு நாடுகளுக்கு இடையே போர் நடப்பது போன்று இது காட்சி தருகிறது.  தடைகளைத் தகர்த்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். 


இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது.  போராட்டம் பல மாதங்களுக்கு நீடித்தாலும் கூட  அதை சமாளிக்கும் வகையில், பலத்த ஏற்பாடுகளுடன்தான் விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.


இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த 3ம் கட்ட பேச்சு வார்த்தை யாருக்கு சாதகமாக அமையும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய், பியூஸ் கோயல் ஆகியோர் இன்று மாலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் ஈடுபட உள்ளனர். 37 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிசான் மோச்சா போன்ற அமைப்புகளும் விவசாய சங்கங்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.


மறுபக்கம் மத்திய அரசை கண்டித்து நாளை நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு சம்யுக்த  கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.