வெள்ளத்தால் நிலை குலைந்த சென்னை.. நிவாரணப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு!

Su.tha Arivalagan
Dec 07, 2023,06:34 PM IST

சென்னை: கன மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு முதல் கட்ட நிதியை விடுவித்துள்ளது. இதேபோல ஆந்திராவுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.


மிச்சாங் புயல் தமிழ்நாட்டையும், ஆந்திராவையும் கடுமையாக பாதித்து விட்டது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரம் நீரில் மிதந்தது. இன்னும் அதிலிருந்து மீளவில்லை. 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக ரூ. 450 கோடி விடுவிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 




அதி தீவிர மிச்சாங் புயல் காரணமாக  தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் பாதிப்பு வேறுபட்டு இருந்தாலும் கூட, பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. பயிர்களும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாநில அரசுகளுக்கு இந்த இடர் காலத்தில் உதவி செய்வதற்காக, ஆந்திர மாநில அரசுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 493.60 கோடி நிதியும், தமிழ்நாட்டுக்கு ரூ. 450 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.


இந்தத் தொகையின் முதல் தவணையை மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு அனுப்பி விட்டது.  பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு மக்களுக்குத் துணை நிற்கும்.


சென்னை நகரமானது பல்வேறு வெள்ளப் பெருக்கு சம்பவங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த 8 வருடங்களில் இது 3வது முறையாகும். பெருநகரங்களில் பெரு மழை காரணமாக இதுபோன்ற வெள்ளப் பெருக்கு சம்பவங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.


பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்பின் காரணமாக, சென்னை வடிநில ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ளத் தடுப்பு நிர்வாகப் பணிகளுக்காக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 561.29 கோடியை ஒதுக்க பிரதமர்  மோடி உத்தரவிட்டுள்ளார். இது சென்னை நகரில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்