ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

Su.tha Arivalagan
Sep 18, 2024,06:41 PM IST

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கமிட்டி அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. 


இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்ட மசோதா உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.




இரண்டு கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று ராம்நாத் கோவிந்த் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலை நடத்தலாம் என்றும், 2வது கட்டமாக பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.


இதுதொடர்பாக  நாடு முழுவதும் விவாதங்கள் விரிவான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஒரு அமலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இக்கமிட்டி தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கடும் எதிர்ப்பு




மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது ஜனநாயகத்தை முடக்கிப் போடும் செயல். தேர்தல்களை எப்போது தேவையோ அப்போதுதான் நடத்த முடியும். அப்படி செய்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கி இருக்கும் என்றார் மல்லிகார்ஜூன கார்கே.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், இது நாடு முழுவதும் அமல்படுத்துவது இயலாத காரியம். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. தற்போது உள்ள பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே அவர்கள் முயல்கிறார்கள் என்றார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா கூறுகையில், இது நடைமுறைக்கு ஒத்துவராத செயல், இயற்கைக்குப் புறம்பானது. தற்போதைய அரசியல் சாசனத்தில் பல முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை புறம் தள்ளி விட்டு போக முடியாது. எனவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம். இதுகுறித்து நாடாளுமன்றம் கூடும்போது நாங்கள் உரிய முடிவை எடுப்போம் என்றார் டி.ராஜா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்