ஆத்தாடி.. இந்த வார்த்தையெல்லாம் லியோவுல இருந்துச்சா.. கட் செய்த சென்சார்!

Su.tha Arivalagan
Oct 05, 2023,02:30 PM IST

- சங்கமித்திரை


சென்னை: லியோ படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது தெரியும். படத்தில் ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகள் இருக்கும் என்று தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


விஜய், திரிஷா,  சஞ்சய் தத் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இரண்டு பாடல்களுமே ரசிகர்களைக் கொண்டாட வைத்து விட்டது.




இந்த நிலையில் தற்போது படத்தின் சென்சார் முடிந்து யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த செய்தியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் படத்தில் பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளில்  சென்சார் போர்டு கை வைத்துள்ளதாம்.


படத்தில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பாடல்களில் வசனங்களில் கெட்ட வார்த்தைகளை மிக மிக இயல்பாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ரஜினியின் பேட்ட படத்திலேயே அனிருத் ஒரு பாடலில் "த்தா" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். நல்ல வேளை அதை ரஜினி பாடுவது போல வைக்காமல்  விட்டு விட்டனர்.


அதேபோல பல படங்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை கிட்டத்தட்ட இயல்பாக்கி வருகின்றனர். கேட்டால் காட்சிக்கு இயல்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் லியோ படத்திலும் கூட சில காட்சிகளில் இதுபோன்ற வசனங்கள் இடம் பெற்றதாக சொல்கிறார்கள். அதை சென்சார் போர்டு மியூட் அல்லது டெலிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புகை பிடிக்கும் காட்சிகள்


புகை பிடிக்கும் சில காட்சிகளில் அது தொடர்பான எச்சரிக்கை வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.  படத்தில் அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளில் அரசியல் சார்பான விஷயங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் சில திருத்தங்களை சென்சார் மேற்கொண்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. 




இத்தனை மாற்றங்களையும் செய்த பிறகுதான் யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது லியோ படத்துக்கு. இதற்கிடையே, லியோ பட சென்சார் சான்றிதழ் என்று கூறி ஒரு சர்ட்டிபிகேட் உலா வருகிறது. ஆனால் அது போலியானது என்றும் ஒரு தகவல் கூறுகிறது. 


ஸோ எது உண்மை, எது பொய் என்று தெரியவில்லை. படம் வந்த பிறகுதான் எதெல்லாம் உண்மை என்று தெரிய வரும். எனவே அதுவரை பொறுத்திருப்போம்.. படம் வந்த பிறகு பாரத்து ரசிப்போம்.