நீட் தேர்வில் முறைகேடு.. நடந்தது என்ன.. FIR போட்டு விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

Su.tha Arivalagan
Jun 23, 2024,04:42 PM IST

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.


மத்திய மனித வள ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. தேர்வு முறைகேடு, சதிச் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை சிபிஐ தனது காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளது.




முன்னதாக யுஜி நீட் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. 

 

நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து வட மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இதை கையில் எடுத்துள்ளனர. இதனால் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. அதேசமயம், 1500 பேருக்கு மட்டுமல்லாமல், மொத்தமாக நீட் மறு தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்ுத விட்டது.


தற்போது கருணை மதிப்பெண் பெற்று சுப்ரீம் கோர்ட்டால் அது ரத்து செய்யப்பட்ட 1563 மாணவ மாணவியருக்கு இன்று நீட் மறு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.