Cauvery Issue.. அனைத்துக் கட்சி எம்.பிக்களுடன் மத்திய அரசிடம் முறையிட திமுக முடிவு
சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்தி நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அனைத்துக் கட்சி எம்.பிக்களுடன் இணைந்து சந்தித்து முறையிட திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் அக்கூட்டத்தில் எப்படிச் செயல்படுவது என்றும் எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கூட்டணிக் கட்சிகள் சார்பில் முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து கர்நாடகா தவறான தகவல்களை மத்திய அரசுக்கு அளித்து வருகிறது. இந்த பொய்த் தகவல்களை மத்திய அரசு நம்பக் கூடாது என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார். அனைத்துக் கட்சி எம்.பிக்களை இணைத்து குழுவாக சென்று அமைச்சரை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக அளிக்கவும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குலத் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம். இதை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இதர பொதுப் பிரச்சினைகள் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்களோடு இணைந்து திமுக தொடர்ந்து உரத்துக் குரல் கொடுக்கும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.