காவிரி: சட்டசபையில் தனித் தீர்மானம்.. காரசார விவாதத்துக்குப் பின்.. நிறைவேற்றம்

Meenakshi
Oct 09, 2023,05:50 PM IST

சென்னை: தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் காரசார விவாதத்துக்குப் பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினை தொடர்பாக தனித்தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.




முதல்வர் பேசுகையில், 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமை வரை சென்று பயிர்கள் செழித்தன.


இதன் பயனாக 2021- 22 ஆம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவில் 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் செலவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம் உற்பத்தியும் பெருகியது.காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் எப்பொழுதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க வரும்புகிறேன் என்றார். 


இதைத் தொடர்ந்து தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பாஜக தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது அவருக்கும் சபாநாயகர் அப்பாவுவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இறுதியில் பாஜக வெளிநடப்பு செய்தது. 


அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போதும் அவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கும் இடையே விவாதம் நடந்தது. இறுதியில் தீர்மானத்தை ஆதரிப்பதாக அதிமுக தெரிவித்தது. பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


இதையடுத்து வாய் மொழி ஓட்டெடுப்பில் தீர்மானம் வென்றதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். எதிர்ப்பே இல்லாமல் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.