விதிமுறைகளை மீறியதாக..  தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு

Meenakshi
Mar 23, 2024,02:03 PM IST

சென்னை: அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினார் என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது.   தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதை மீறுவோர் மீது வழக்குகள் பாய்ந்து வருகின்றன.




தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில்,  தமிழகத்தின் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் நட்சத்திர வேட்பாளரான ஜெயவர்தனை அறிமுகப்படுத்தும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக பறக்கும் படையினருக்கு புகார்கள் வந்தன. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மீது   தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.