கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி பலி
திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது வேகமாக சென்ற கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி, சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளது. பள்ளத்தில் விழுந்த கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். உயிர் இழந்த இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் உயிர் இழந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.