71 வயதைத் தொட்ட "கேப்டன்" விஜயகாந்த்.. உற்சாகக் காத்திருப்பில் தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Aug 25, 2023,10:24 AM IST
சென்னை: கேப்டன் என்று கட்சி பாரபட்சமில்லாமல் அழைக்கப்படும் விஜயகாந்த், இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிரடி நாயகனாக புகழ் பெற்றவர் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாமே புரட்சிகரமான கதையம்சமும், கருத்துக்களும் அடங்கியதாக இருந்ததால் அவருக்கு ஏழை எளிய சாமானிய மக்களிடம் அதிக ஆதரவு கிடைத்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு இமயங்களுக்கு மத்தியில் தனக்கென தனி பாணி நடிப்பைக் கொண்டு வந்து தனித்து நின்று ஜொலிக்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.



புரட்சிகரமான படங்களில் நடித்த விஜயகாந்த்துக்கு புரட்சிக் கலைஞர் என்ற பெயரும் பின்னர் வந்து சேர்ந்தது. நடிப்பில் கிடைத்த புகழால் அவர் பின்னர் அரசியலுக்கு வந்தார். தேசிய திராவிட முற்போக்குக் கழகம் என்ற கட்சியை மதுரையில் வைத்துத் தொடங்கினார். தொடங்கிய வேகத்திலேயே இக்கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரும் ஆதரவு கிடைத்தது.

ஆனானப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதாவே ஆடிப் போகும் அளவுக்கு விஜயகாந்த்தின் வளர்ச்சி இருந்தது. முதல் தேர்தலில் விஜயகாந்த் அபார வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். ஆனால் அடுத்தடுத்து அவர் எடுத்து சில அரசியல் முடிவுகள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தி விட்டன. எந்த மக்கள் தேமுதிகவுக்கு ஆதரவு கொடுத்து தூக்கி விட தயாராக இருந்தார்களோ அவர்கள் பின்னர் தேமுதிகவை கை விடடு விட்டனர். இன்று செல்வாக்கு இழந்த நிலையில் தேமுதிக இருக்கிறது.

மறுபக்கம் விஜயகாந்த் உடல் நலிவுற்று வீட்டோடு முடங்கும் அளவுக்குப் போய் விட்டார். அவர் விஜயகாந்த் மீது பாசம் வைத்திருப்போர் சற்றும் அதிலிருந்து மாறவில்லை. இன்று வரை எங்கள் கேப்டன், எங்கள் விஜயகாந்த் என்று பாசம் காட்டவே செய்கிறார்கள். அவ்வப்போது அவரது புகைப்படம் அல்லது வீடியோ வெளியாகி ரசிகர்களை வேதனைப்பட வைக்கிறது. அவர் இருந்த இருப்பு என்ன, இப்போது இப்படி ஆகி விட்டாரே என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

இன்று விஜயகாந்த் பிறந்த நாள். தனது பிறந்த நாளை அவர் எப்போதுமே ஆடம்பரமாக கொண்டாடியதில்லை. ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளையும் தியாகம் செய்தவர் அவர். அதற்குப் பதில் வறுமை ஒழிப்பு தினமாக அதைக் கொண்டாடி வருகிறார். நலத் திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தின் பிறந்த நாளை அவரது கட்சியினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் அவர் ஆக்ரோஷமாக திரும்ப வேண்டும்.. ஆர்ப்பரித்து ஓடி வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் விஜயகாந்த் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது தேமுதிக.