இதோ வந்தாச்சு.. கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் .. ஜஸ்டின் செம திட்டம்!

Meenakshi
Apr 02, 2024,06:05 PM IST

டோரன்டோ: தமிழ்நாட்டில் இருப்பது போல கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேசிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


தமிழகத்தில் சத்துணவு திட்டம் என்பது காமராஜர் காலத்திலேயே கொண்டு வரப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமா தற்பொழுது காலை உணவு திட்டமும் வந்து விட்டது. நம்ம தமிழ்நாட்டில் முன்னரே கொண்டு வரப்பட்ட இத்திட்டம் இப்போது கனடாவுக்கும் வந்து விட்டது.




அதுவும் எப்போது முதல் தெரியுமா.. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 19ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. கனடா நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்.


ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 4,00,000 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இத்தகைய திட்டத்தை தொடங்குவது குறித்து ஆராய்ந்து வந்தது. இப்போதுதான் அது நனவாகிறது.