விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. ஓய்ந்தது சூறாவளி தேர்தல் பிரச்சாரம்.. ஜூலை 10ம் தேதி வாக்குப் பதிவு!

Meenakshi
Jul 08, 2024,06:04 PM IST

விழுப்புரம்:   விக்கிவாண்டி சட்டமன்ற தொகுதியில்  ஜூலை 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.


விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி புகழேந்தி மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 




திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 29 பேர் களம் கண்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியான தேமுதிக ஆகியவை விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இதனால் அந்தக் கட்சிகளின் வாக்குகளைப் பெற பாமக தீவிரமாக செயல்பட்டு வந்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், தனது கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்திருந்தார்.


இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொதியில் கடந்த 20 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தனர். இந்தப் பின்னணியில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பிரசாரம் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளியூர்க்காரர்களும் வெளியேறி விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதியிலிருந்து வெளியூர்க்காரர்கள் வெளியேறி வருகிறார்கள்.


தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாகவும், பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் கடைசி கட்ட பிரச்சாரம் செய்து பேசினார்கள்.


நாளை மறுநாள் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. 10ம் தேதி பதிவான வாக்குகள்  13ம் தேதி  எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.