எதிர்க்கட்சிகளை அழித்து.. கோர்ட்டுகளை தவறாக பயன்படுத்தி..  இப்படியும் ஒரு தலைவர்!

Su.tha Arivalagan
Jul 22, 2023,11:23 AM IST

நாம்பென்: கம்போடியாவின் சர்வாதிகாரியாக வலம் வரும் ஹூன் சென், தனது மகனை அடுத்து அதிபராக்கத் திட்டமிட்டுள்ளார். இதனால் கம்போடியா மக்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த 38 வருடமாக ஹூன்சென்தான், அந்த நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். முழுக்க முழுக்க சர்வாதிகாரத்தின் மூலமாக இவர் ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது ஆட்சிப் பொறுப்பை தனது மகனிடம் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.


நாளை கம்போடியா நாடாளுமன்றத்திற்குத் 7வது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹூன் சென் ஆட்சியில் ஒரு தேர்தல் கூட முறையாக நடந்ததில்லை. முழுக்க முழுக்க மோசடி செய்தே அவர் வெற்றி பெற்று வந்துள்ளார். அதேபோலவே இந்த முறையும் அதேபோல ஒரு முறைகேடான தேர்தல்தான் நாளை நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இதனால் மீண்டும் பிரதமராக ஹூன் சென் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.


தற்போது 70 வயதாகும் ஹூன் சென், கடந்த 1985ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருந்து வருகிறார்.  காமரூன் மற்றும் கினியா நாடுகளுக்கு அடுத்து நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமர் ஹூன் சென்தான். காமரூன், கினியா தலைவர்களும் கூட சர்வாதிகாரிகளாக இருந்தவர்கள்தான்.


சீனாவின் முழு ஆதரவு கம்போடியாவுக்கு உள்ளது. இதனால் மேற்கத்திய  நாடுகளின் பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை எளிதாக சமாளித்து விடுகிறது கம்போடியா. இந்த நிலையில் தனக்கு வயதாகி வருவதால் ஆட்சிப் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைக்க ஹூன் சென் முடிவு செய்துள்ளார்.


தேர்தல் முடிந்த பின்னர் தனது மகன் ஹூன் மானெட்டிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறாராம். தற்போது ஹூன் மானெட் ராணுவத்தில் பணியாற்றுகிறார்.  ஹூன் சென்னுக்கு மொத்தம்  3 மகன்கள். அதில் மூத்தவர்தான் இந்த மானெட்.  நீண்ட காலமாகவே தனது தந்தையின் பதவியை குறி வைத்துக் காத்திருக்கிறார் மானெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இரும்புக் கரம் கொண்டு ஆட்சி


ஆரம்பத்தில் இந்த அளவுக்கு ஹூன் சென் மோசமானவராக இல்லை. போகப் போகத்தான் அவரு��்கு பதவி வெறி அதிகரித்தது. சிலஆண்டுகளுக்கு முன்பு தனது மக்களுக்கு எதிராகவும்,எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார்.


எதிர்க்கட்சிகளை கூண்டோடு அழித்தார், பணிய வைத்தார். தனக்கு அடி பணியாதவர்களை அழித்தார். கட்சிகளை காலி செய்தார். எம்.பிக்களை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்து தூக்கி எறிந்தார். அவர்களைக் கைது செய்தார். சிறையில் தள்ளினார். பலர் இன்னும் வெளியே வரவே முடியவில்லை. எதிர்ப்பு தெரிவித்த யாரையும் அவர் விட்டதில்லை. அத்தனை பேரையும் காலி செய்தார். 


ராணுவம், போலீஸ், விசாரணை அமைப்புகள், கோர்ட்டுகள்  என அனைத்தையும் தனது ஏவல்காரர்களாக மாற்றி அதன் மூலம்தான் ஆட்சி நடத்தி வருகிறார் ஹூன் சென். 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 125 எம்.பி சீட்டுகளிலும் தனது கட்சியே வென்றதாக அறிவித்து உலகையே அதிர வைத்தார்.  அப்போதுதான் இவரது மோசடிகள் உலகத்துக்குத் தெரிய வந்தது.  இதே போன்றதொரு ரிசல்ட்தான் நாளைய தேர்தலிலும் கிடைக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.