என்னாச்சு.. புஸ்ஸி ஆனந்த் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி.. விரைந்தார் விஜய்!

Su.tha Arivalagan
Nov 03, 2023,08:49 AM IST

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நடிகர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.


விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் முன்னாள் அரசியல்வாதி ஆவார். தற்போது விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருபவர் இவர்தான். புஸ்ஸி ஆனந்த் தலைமையில்தான் தற்போது விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு, பணிகள் சீராக முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலுக்கு விஜய் வரும்போது இந்த இயக்கம் அப்படியே கட்சி அமைப்பாக மாறும் அளவுக்கு பணிகளை செய்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.




தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆலோசனைகள் நடத்துகிறார். சமீபத்தில் லியோ பட வெற்றி விழா நடைபெற்றது. அதிலும் தீவிரமாக பங்கேற்றிருந்தார் புஸ்ஸி ஆனந்த். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல் அசவுகரியம் ஏற்பட்டது. உடனடியாக அவரை குளோபல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்தனர்.


அதீத உடல் சோர்வு காரணமாகவே உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது புஸ்ஸி ஆனந்த் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் நடிகர் விஜய் விரைந்து சென்று ஆனந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.