டேய் சரவணா எங்கடா போன.. புதுச்சேரி தவெக நிர்வாகி உடலைப் பார்த்து...கதறியழுத புஸ்ஸி ஆனந்த்

Meenakshi
Oct 22, 2024,12:25 PM IST

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சரவணன் உடலை பார்த்து கதறி அழுதார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் கடந்த சில நாட்களாக விக்கிவாண்டியில் தங்கி மாநாட்டு பணிகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குத் திரும்பியுள்ளார் சரவணன். தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 


இதனையறிந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த சரவணன் வீட்டிற்கு நேரில் சென்று கதறி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலில் பரவி வருகிறது. டேய் சரவணா எங்கடா போன என்று கேட்டு கதறி அழுதுள்ளார் புஸ்ஸி ஆனந்த். சரவணனும், ஆனந்த்தும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 


இவரது இழப்பு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக புதுச்சேரி நிர்வாகி சரவணன் மறைவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.


அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்