ரெடியா நண்பா.. த.வெ.க. மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம்.. புஸ்ஸி ஆனந்த்

Meenakshi
Jun 15, 2024,10:18 AM IST

ஈரோடு: தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். அனுமதி பெற்ற பிறகு விரைவில் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய். தற்போது டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டார். இந்நிலையில்  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 




கடந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல இந்த வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு  பரிசுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின்னர்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இந்த நிகழ்விற்கு பின்னர் த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது,  தலைவர் அறிக்கையில் தெளிவாக சொல்லி இருக்கிறார். எங்களுடைய இலக்கு 2026 என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் 2 வருசம் இருக்கு. எதுவாக இருந்தாலும் தலைவர், தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தான் அறிவிப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். 


ஒரு வாரமாக எல்லா இடத்திற்கும் போயிட்டு தான் இருக்கேன். புதுக்கோட்டை,நாமக்கல், சேலம், ஈரோடு, மதுரை,கரூர் என்று எல்லா இடத்திற்கும் போயிட்டு இருக்கேன். எங்களுடைய செயலை தான் நீங்க பார்க்கனும். எல்லா இடத்திலயும் மாநாடு பத்திதான் கேட்கிறாங்க. எதுவாக இருந்தாலும் சரி தலைவர், தளபதி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தான் அறிவிப்பார். ஈரோட்டில் நாங்க நல உதவிகள் எதுவும் கொடுக்கல, ஈரோடு மாவட்டத்தில் காலையில் அலுவலகம் திறந்தோம். இங்கு ஆலோசனை கூட்டம் தான் நடத்தினோம். எதுவாக இருந்தாலும் தலைவர் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


விரைவில் விஜய்யின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அனேகமாக இந்த மாநாட்டுக்குப் பின்னர் கட்சிப் பணிகள் விரைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு வாழ்த்துகள் மற்றும் இரங்கல் செய்திகள்தான் அதிக அளவில் விஜய்யிடமிருந்து வருகிறது. இது ஒரு வகையில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பலர் டிரோல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். எனவே கோட் படம் முடிந்ததும் விஜய் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.