பயணிகளின் கவனத்திற்கு..  தென் மாவட்ட பஸ் எல்லாம்.. இனி கிளாம்பாக்கத்தோடு ஸ்டாப்..!

Meenakshi
Dec 30, 2023,05:18 PM IST

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இனி கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் மாவட்டப் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. மேலும் தென் மாவட்ட ஆம்னி பேருந்துகளும் இனி இங்கிருந்தே இயக்கப்படும். அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


கிளம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். காலை 4 முதல் இரவு 10 மணி வரை கோயம்பேட்டிற்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும். காலை 10 முதல் மாலை 4 மணி வரை கோயம்பேட்டிற்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும். 70வி, 70 சி, 14 சிசிடி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இருந்து இயக்கப்படும். அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்படும்.  தென் மாவட்டப் பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு போகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும். தேவைப்பட்டால் ரயில் நிலையங்களில்  இருந்தும் கிளம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, பயணிகளுக்கு முறையாக இந்த தகவல் சென்று சேரும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டிருக்கின்றோம் என்று ஆம்னி பஸ்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.