உ.பின்னாலே புல்டோசர்தானா.. கட்டணம் செலுத்தச் சொன்னதால் கோபம்.. டோல்கேட்டை நொறுக்கித் தள்ளிய டிரைவர்!

Su.tha Arivalagan
Jun 11, 2024,04:20 PM IST
லக்னோ:  டெல்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் ஹாப்பூர் என்ற இடத்தில் உள்ள டோல்கேட்டை கடப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்கள் கூறியதால் கோபமடைந்த புல்டோசர் டிரைவர் ஒருவர், அந்த டோல் பூத்தையே புல்டோசரால் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கி விட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் புதிய அடையாளமாக மாறி விட்டது புல்டோசர். காரணம், அந்த மாநில அரசு அதிக அளவில் புல்டோசரைப் பயன்படுத்துவதால். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நில்லாமல், அரசுக்கு எதிராக குரல் கொடுப்போரின் வீடுகளை இடிக்கவும் எதிராகவும் அங்கு புல்டோசர் அதிக அளவில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும் உ.பி அரசும், காவல்துறையும் சிவில் நிர்வாகங்களும் புல்டோசரைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை.



பிரதமர் நரேந்திர மோடியே கூட சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட புல்டோசரை எப்படி பயன்படுத்தணும்னு யோகி ஆதித்யநாத் கிட்ட கத்துக்கலாம் என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் உ.பியில் புல்டோசர் டிரைவர் ஒருவர் வேறு விதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹாப்பூர் பகுதியில் ஒரு புல்டோசர் வந்துள்ளது. அங்குள்ள டோல்கேட்டை கிராஸ் செய்தபோது அங்கிருந்த ஊழியர்கள், கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த புல்டோசர் டிரைவர் செலுத்த மறுத்து வாதம் புரிந்துள்ளார். டோல்கேட் ஊழியர்களுடன் கடுமையாக வாதம் புரிந்த அவர் திடீரென கோபமாகி புல்டோசரை வைத்து அந்த பூத்தை நொறுக்கத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டோல்கேட் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

சற்று நேரத்தில் 2 பூத்துகளை புல்டோசரால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டார் அந்த டிரைவர். பூத்தைத் தாங்கி நிற்கும் இரும்புத் தூன்களையும் கூட அவர் தாக்கி துவம்சம் செய்து விட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.