கூடியது நாடாளுமன்றம்.. சாரட் வண்டியில் வருகை வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

Manjula Devi
Jan 31, 2024,11:06 AM IST

புதுடில்லி:  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரை தொடங்கி வைப்பதற்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.


பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டிய வண்டியில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கும் கூட இதே போல குதிரை பூட்டிய சாரட்டில்தான் குடியரசுத் தலைவர் வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.




இரு அவைகளின் கூட்டுத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தற்போது உரை நிகழ்த்தி வருகிறார். ஆண்டின் முதல் கூட்டத்  தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டம் தொடங்கியுள்ளது.


இந்த வருடம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் தற்போதைய பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டம் இது. மேலும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு எந்த மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதனை வைத்து தேர்தல் அறிக்கை வெளியிட பல்வேறு கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


சாமானிய மக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருட்களின் மீதான வரிக் குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், மக்களைக் குறி வைத்து பல சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி  9 வரை நடைபெறும். இடைக்கால பட்ஜெட்டில் வரிக்குறைப்பு, புதிய திட்டங்கள், சலுகைகள், புதிய அறிவிப்புகள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.




முன்னதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரை சமூகமாக நடத்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. 


கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் வேலைவாய்ப்பை தர வேண்டும் என முழக்கத்துடன் வண்ணப் புகை குப்பிகளை வீசி நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற பாதுகாப்பிற்கு வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.


இதன் காரணமாக தற்போது நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.