ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான பட்ஜெட் இது : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Aadmika
Feb 01, 2024,05:08 PM IST

டில்லி : இது ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான பட்ஜெட் என தனது ஆறாவது பட்ஜெட் உரையில் மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.


லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளதால் 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் உரை ஆகும். அவர் தனது பட்ஜெட் உரையில், பாஜக தலைமையிலான அரசு வளர்ச்சி அடிப்படையாக கொண்டு பணியாற்றி வருகிறது. அனைவருக்கும், அனைத்து தரப்பிலும் வளர்ச்சி, திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் முன்னேற்றமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். 




இது ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆகும். இந்த நான்கு ஜாதிகள் மட்டுமே எங்களின் அரசில் உள்ளது. மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூர்யஜ்வாலா திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் வீட்டின் மேல்தளத்தில் அமைக்கப்படும் சோலார் தகடுகளால் 300 யூனிட் மின்சாரத்தை ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற முடியும். 


இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஜிஎஸ்டி.,யால் வரி அடிப்படையிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.   நாங்கள் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். எவ்வளவு செலவு என்பதை நினைக்காததால் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.