நிர்மலா சீதாராமனுக்கு தனது கையால் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

Aadmika
Feb 01, 2024,05:08 PM IST

டில்லி : விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பட்ஜெட் தாக்கலிலும் புதிய சாதனை படைத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகிறது.  அவருக்கு தனது கையால் இனிப்பு ஊட்டி மகிழ்ந்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 01) லோக்சபாவில் தனது ஆறாவது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். முழு பட்ஜெட், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். தற்போது துவங்கி உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி திரொபதி முர்முவின் உரையுடன் துவங்கி உள்ளது. 




2016ம் ஆண்டு பாஜக சார்பில் கர்நாடக ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்பி.,யானார் நிர்மலா சீதாராமன். எம்பி.,யாக பொறுப்பேற்ற சில மாதங்களில் 2017ம் ஆண்டு இவருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமரான இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.  அதே சமயம் இந்திரா காந்தி கூடுதல் பொறுப்பாக மட்டுமே பாதுகாப்பு துறையை கவனித்து வந்தார். ஆனால் முழு நேர பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும்.


2019ம் ஆண்டு மே மாதம் நிதித்துறை மற்றும் கூட்டுறவு விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லியின் மறைவிற்கு பிறகு முழு நேர நிதியமைச்சரானார். இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றார். இவரது பதவி காலத்திலேயே உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை 2022ம் ஆண்டு இந்தியா பெற்றது. புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல் நிதியமைச்சர் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார். 


தற்போது 2024-25 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இவர் தாக்கல் செய்துள்ளார். இது இவரது 6வது பட்ஜெட் உரை ஆகும். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொராஜ் தேசாயின் சாதனையை நிர்மலா சமன் செய்துள்ளார். மொராஜ் தேசாய் தனது பதவி காலத்தில் 1959 முதல் 1964 ம் ஆண்டு வரை 5 முறை ஆண்டு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.


பலத்த வரவேற்பு


முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு தனது கையால் ஸ்வீட் ஊட்டி மகிழ்ந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. மேலும் லோக்சபாவில் பட்ஜெட் தாக்கலுக்காக நிர்மலா சீதாராமன் எழுந்தபோது உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி வரவேற்பு அளித்தனர்.