BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

Su.tha Arivalagan
Oct 22, 2024,06:24 PM IST

டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டு புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 7 சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சிடாக் நிறுவனத்துடன் இணைந்து புதிய 5ஜி கட்டமைப்பு சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுரங்கப் பணிகளுக்கான சிறப்பு சேவையாகும். 


அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. அதன் சேவை அட்டகாசமாகவும் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது பொலிவிழந்து நலிவடைந்து தளர்ந்து போனது. தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. சமீப காலமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவைக்கு பலரும் மாறி வருகின்றனர். 




இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.  விரைவில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கவுள்ள நிலையில் இந்த புதிய மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன.


பழைய லோகோவில் இருந்த Conencting India என்ற வாசகம் Connecting Bharat  என்று மாற்றப்பட்டுள்ளது. அதன் இலச்சினையில் இருந்த நிறமும் மாறியுள்ளது. முன்பு இருந்தது போல இல்லாமல் இப்போது காவி நிறப் பின்னணியில் இந்தியாவின் வரைபடமும் பச்சை மற்றும் வெண்மை நிற வளையமும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர புதிதாக Securely Affordably Reliable என்ற ஸ்லோகனும் இடம் பெற்றுள்ளது.


இதுதவிர 7 புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பேம் இல்லாத கட்டமைப்பு, தேசிய அளவிலான வைபை ரோமிங் வசதி, சிம்களை எந்த நேரத்திலும் வாங்க வகை செய்யும் கியாஸ்க்குகள், டைரக்ட் டு டிவைஸ் சேவை, சுரங்கங்களுக்கான 5ஜி சேவை, இன்ட்ராநெட் டிவி உள்ளிட்டைவயும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்