அதானி தொடர்புடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த.. போரிஸ் ஜான்சனின் தம்பி ராஜினாமா!

Su.tha Arivalagan
Feb 03, 2023,12:10 PM IST
லண்டன்: அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய, இங்கிலாந்தில் இருக்கும் எலாரா கேப்பிடல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி லார்ட் ஜோ ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். எலாரா நிறுவனத்திற்கு, தொடர்புடைய வர்த்தகத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என்பதால் விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



லண்டனிலிருந்து செயல்பட்டு வருகிறது எலாரா கேப்பிடல் நிறுவனம். இது ஒரு முதலீட்டு நிறுவனமாகும். இந்திய நிறுவனங்களுக்காக கேப்பிடல் முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனமாக தன்னைக் கூறிக் கொள்கிறது. அதானி நிறுவனத்துடன் தொடர்புடையதாக இது கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் ஜோ ஜான்சன். 

இந்த நிலையில் அதானி நிறுவனம் தொடர்பாக ஹின்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மிகப் பெரிய சரிவைக் கண்டது. இதனால் அந்த நிறுவனத்தின் FPO வெளியீட்டை நிறுத்தி வைத்தது அதானி குழுமம்.

இந்தப் பின்னணியில்தான் ஜோ ஜான்சன் தனது பதவியை உதறியுள்ளார். எலாரா நிறுவனத்திற்கு தொடர்புடைய வர்த்தகத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக ஜோ ஜான்சன் கூறியுள்ளார். 51 வயதான ஜோ ஜான்சன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இயக்குநராக செயல்பட்டு வந்தார்.

எலாரா நிறுவனத்தின்நிறுவனர் ராஜ் பட்.  இவர் கடந்த 2002ம் ஆண்டு எலாரா கேப்பிடல் நிறுவனத்தைத் தொடங்கினார்.