ஆந்திரா, தெலுங்கானா.. 9 மாநிலங்களில் 96 தொகுதிகளில்..விறுவிறுப்பான 4ம் கட்டத் தேர்தல்..மக்கள் ஆர்வம்

Manjula Devi
May 13, 2024,10:36 AM IST

டெல்லி: ஆந்திரா, தெலுங்கானா உள்பட 9 மாநிலங்களில் 96 தொகுதிகளில்  நான்காம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ஏழு கட்டங்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 66.71% வாக்குகள் பதிவாகின. கடந்த வாரம் மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது.




இந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , தெலங்கானாவில் 17 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகளில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.


வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அதிகாலை முதலே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை 

ஆற்றி வருகின்றனர். ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுவதால் அங்கு மக்கள் இரண்டு வாக்குகளை அளிக்க வேண்டும்.


நான்காம் கட்ட தேர்தல் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும்  நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி  தமிழக போலீசார், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.06 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.