தாலி கட்டும் நேரத்தில்.. மணப் பெண் மரணம்.. அதே மேடையில்.. தங்கையை மணந்தார் மணமகன்!

Su.tha Arivalagan
Feb 26, 2023,12:46 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநிலம் பவநகர் பகுதியில் மணமேடையில் மணப்பெண் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது தங்கையை மணமகனுக்கு கட்டித் தர பெண் வீட்டார் சம்மதித்ததால் அவருடன் அதே முகூர்த்தத்தில் திருமணம் நடந்தது.

பவநகர் பகவனேஷ்வர் மகாதேவ் கோவிலில் ஜீனாபாய் ரதோர் என்பவரின் மகள் ஹீத்தல், ரானாபாய் புட்டா பாய் அல்கோட்டார் என்பவரின் மகன் விஷால் ஆகியோரது திருமணம் நடப்பதாக இருந்தது. 

மணப்பெண்ணும், மணமகனும் மேடைக்கு வந்து அமர்ந்து சடங்குகள் தொடங்கி விட்டன. திருமணம் நடக்கவிருந்த இடத்தில் இரு வீட்டாரின் உறவினர்களும் குழுமியிருந்தனர். அந்த இடமே கோலாகலமகாக காணப்பட்டது. தாலி கட்ட சில நிமிடங்களே இருந்த நிலையில் திடீரென மணமகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிச் சரிந்தார். உடனடியாக திருமண சடங்குகள் நிறுத்தப்பட்டு ஹீத்தல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஹீத்தல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதைக் கேட்டு இரு வீட்டாரும் பெரும் சோகமடைந்தனர். ஆனால் திருமணத்தை  நிறுத்த வேண்டாம், மாற்று ஏற்பாடு செய்து நடத்தலாம் என்று தீர்மானித்தனர். இதையடுத்து  ஹீத்தலின் தங்கையை, விஷாலுக்கு கட்டி வைக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் யோசனை தெரிவித்தனர். அதற்கு ஹீத்தலின் குடும்பத்தினரும் ஒத்துக் கொண்டனர். அக்காவின் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருந்த அவரது தங்கையும், குடும்பத்தார் வற்புறுத்தியதால் இந்த திடீர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். அதன் பின்னர் திருமணம் நடந்தேறியது.

திருமணம் நடந்து முடியும் வரை ஹீத்தலின் உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. கல்யாணத்தை முடித்த பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் தொடங்கின.  இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.