16 வயதில் குழந்தை.. உருகி உருகி காதலித்த பெண்.. கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன்!

Meenakshi
Dec 02, 2023,12:56 PM IST

சென்னை: பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்த தனது காதலியை கொலை செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து அதிர வைத்துள்ளார் ஒரு இளைஞர்.


அந்தப் பெண் கல்லூரி மாணவி ஆவார். இவர்களுக்குள் என்ன பிரச்சினை, எதனால் கொலை செய்தார், அதை ஏன் ஸ்டேட்டஸ் வைத்தார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் பெளசியா. கேரளாவை சேர்ந்த இவருக்கு வயது 20. இவரது காதலன் ஆஷிக். இருவரும் நீண்ட  நாள் காதலர்கள், அதாவது பள்ளியில் பெளசியா படித்தது முதலே காதலித்து வந்துள்ளனர். சம்பவம் நடந்ததற்கு 2 நாட்களுக்கு முன்னர் காதலன் ஆஷிக்கை காண செல்வதாக தோழிகளிடம் பெளசியா கூறிச் சென்றுள்ளார். 




ஆனால் போனவர் வரவில்லை. பெளசியாவை 2 நாட்கள் ஆகியும் காணவில்லை என்பதால் பதற்றத்துடன் தோழிகள் தேடியுள்ளனர். தெரிந்தவர்களுக்கும் போன் செய்து விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெளசியாவின் காதலன் ஆஷிக், தன் பள்ளி பருவ காதலியை கொன்றதாக வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். 


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் விசாரித்ததில் இருவரும் சென்னையில் உள்ள குரோம் ரெசிடென்சியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்து பார்த்துள்ளனர். சோதனையில் பெளசியா சடலமாக கிடந்துள்ளார். அவரை கொலை செய்த ஆஷிக்  அங்கு இல்லை. 


இதையடுத்து முதலில் பெளசியாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கொலை செய்த ஆஷிக்கை தேடிய போலீசாருக்கு, பல்லாவரத்தில் குற்றவாளி பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆஷிக்கை கைது செய்தனர்.


போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆஷிக்கிடம் தீவிர விசாரனை நடந்தினர். விசாரணையில் பெளசியாவை கழுத்தை  நெரித்து கொன்றது தெரிய வந்தது. ஆஷிக்கும் , பெளசியாவும் பள்ளி பருவ காதலர்கள். இந்தக் காதலில் இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். 16 வயதிலேயே பெளசியா குழந்தை பெற்றதும் தெரிய வந்தது. ஆஷிக் மீது இது தொடர்பாக கேரள காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு இருக்கிறது.  இருவருக்கும் பிறந்த குழந்தை கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.


ஆஷிக்கிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இது பெளசியாவிற்கும் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். ஆஷிக்கைப் பார்த்து இதுகுறித்துத விசாரிக்க பெளசியா விடுதிக்கு வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அதை வாட்சப்பில் ஸ்டேட்டஸ்சாக வைத்து விட்டார் ஆஷிக். தற்போது ஆஷிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஆஷிக்கின் பெண் வெறி - பெளசியாவின் ஏமாற்றம் இதன் விளைவாக ஒரு உயிர் பறி போயுள்ளது.. ஒரு உயிர் அனாதரவாக ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறது. பெண்கள் காதல், குழந்தை போன்ற விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.. என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்கிறது இந்த சம்பவம்.