பேசாம நீங்க அங்க போய்ருங்க.. சென்னை சிறுமியைக் கடித்த.. 2 நாய்களும் மதுரைக்கு இடமாற்றம்!

Meenakshi
May 07, 2024,05:19 PM IST
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை கடித்த ராட்வெய்லர் நாய்கள் இரண்டும், தற்போது மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. நாய் உரிமையாளர் புகழேந்தியின் மகன் வீட்டுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா  காவலாளராக இருப்பவர் ரகு. இவர் தனது மகள், மனைவியுடன் அதே பூங்காவில் குடியிருக்கிறார். சம்பவத்தன்று புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வெய்லர் நாய்களும் அங்கு வந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ரகுவின் மகள் மீது பாய்ந்து கடித்து விட்டன. அதைத் தடுக்க முயன்ற ரகுவின் மனைவியையும் அவை கடித்தன. நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் புகழேந்தி அங்கிருந்து ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகழேந்தியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.  நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட மூவரும் பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 



சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளர் புகழேந்திக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டஸ் அனுப்பியது. நோட்டீசில், நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி  இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது 2 நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு புகழேந்தி இடம் மாற்றம்  செய்துள்ளார். அங்கு இந்த நாய்களை அவரே கொண்டு போய் விடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளாராம்.