"சிங்கம்" பாணி படங்கள் தப்பு.. சமூகத்துக்கு ஆபத்து.. ஹைகோர்ட் நீதிபதி  கருத்து

Su.tha Arivalagan
Sep 23, 2023,05:45 PM IST

மும்பை: சிங்கம் போன்ற படங்களில் சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் சமூகத்துக்கு தவறான செய்தியைக் கொண்டு செல்கின்றன. இவை ஆபத்தானவை என்று பாம்பே ஹைகோர்ட் நீதிபதி கெளதம் படேல் கூறியுள்ளார்.


ஹரி இயக்கத்தில்  சூர்யா நடிப்பில் உருவாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம்தான் சிங்கம். இந்தப் படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரீமேக்கும் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் சிங்கம் 3 பாகமாக வந்தது. 


இந்த நிலையில் சிங்கம் படத்தில் சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரி கேரக்டர் அபாயகரமானது என்று பாம்பே ஹைகோர்ட் நீதிபதி கெளதம் படேல் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடந்த போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், 


சட்டத்தின் தாமதம் மக்களை அயர்ச்சி அடைய வைக்கிறது. அதேசமயம்  யாரும் சட்டத்தை கையில் எடுத்து விடவும் கூடாது.  போலீஸ் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு முன்பு அனைவருமே சீர்திருந்த வேண்டும். அனைவரும் சீர்திருந்தினால்தான் அனைத்தும் சீர்திருந்த முடியும்.


திரைப்படங்களில் போலீஸ் அதிகாரிகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களே தீர்ப்பளிக்கும்போது, தண்டிக்கும்போது அதை மக்கள் ரசிக்கிறார்கள். சூப்பர் காப் என்று புகழ்கிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்.. கோர்ட்டுகளில் நீதி கிடைக்க ஏற்படும் தாமதங்களே மக்களின் இந்த மனோபாவத்திற்குக் காரணம்.


ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லும்போது அதை மக்கள் சரி என்று சொல்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். நீதி கிடைத்து விட்டதாக கொண்டாடுகிறார்கள்.. அது உண்மையா என்றால் இல்லை என்பதே எனது பதில்.


திரைப்படங்களில் நீதிபதிகளை கோமாளித்தனமாக சித்தரிக்கிறார்கள். தடித்த கண்ணாடி போட்டுக் கொண்டு, தடித்த உருவத்துடன், காணப்படுபவராக அவர்களை காட்டுகிறார்கள். அதேசமயம், சூப்பர் ஹீரோக்களாக காட்டப்படும் போலீஸ் கேரக்டர்களை மிகவும் ஸ்டைலிஷாக காட்டுகிறார்கள். குறிப்பாக சிங்கம் படத்தில், பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதிக்கு எதிராக மொத்த காவல்துறையும் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் காட்சி காட்டப்படுகிறது.  இது எவ்வளவு தவறான செய்தியை கொண்டு செல்கிறது. இது அபாயகரமானது, சமூகத்திற்கு ஆபத்தானது என்றார் நீதிபதி படேல்.