தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்.. பதற்றத்தில் விமான நிறுவனங்கள்.. பயத்தில் பயணிகள்!

Aadmika
Oct 16, 2024,03:58 PM IST

டில்லி : இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருப்பதால் விமான நிறுவனங்கள் அனைத்தும் பதற்றத்துடனேயே உள்ளன. இன்றும் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூருவில் இருந்து செல்லும் ஆகாசா ஏர்லைன்ஸ் விமானங்கள் இரண்டு, மும்பை - டில்லி இடையேயான இண்டிகோ விமானத்திற்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதி வழியிலேயே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் பல்வேறு விமானங்களுக்கு இது போல் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 12 வது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.


டில்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் திரும்பி வந்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுரணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அவசர நிலையும் அறிவிக்கப்பட்டது. பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மும்பையில் இருந்து டில்லி சென்ற இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டுள்ளது.




இது போன்று தொடர்ந்து வெடிகண்டு மிரட்டல்கள் வந்து, பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் உள்துறை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவை அவசரமாக கூடி ஆலோசித்து வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல் காரணம் பல விமானங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இன்னும் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டில்லி-சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானம், டில்லியில் இருந்து கனடா செல்லும் விமானம் ஆகியவையும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 


பண்டிகை காலத்தில் அதிகமான பயணிகள் விமான பயணம் செல்லும் நேரத்தில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விமான பயணிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களால் பலரும் ஏற்கனவே புக் செய்திருந்த விமான டிக்கெட்களை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து வருவதால் விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்