பாஜக எம்எல்ஏவுக்குச் சொந்தமான 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மெயிலில் வந்ததால் பரபரப்பு

Meenakshi
Aug 29, 2024,05:22 PM IST

ஈரோடு: ஈரோடு, சேலம், திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்தும் புரளி என பின்னர் தெரிய வந்தது.


சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள இந்தியன் பப்ளிக்  பள்ளி, ஈரோடு சேனாபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் பள்ளி என 3 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் இமெயில் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு, பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். 




விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த 3 பள்ளிகளும் பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு சொந்தமான பள்ளிகளாகும். இந்த 3 பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் பள்ளியில் இருந்து தகவல் கொடுத்ததன் பேரில், போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.


 பள்ளி முழுவதிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்