சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பிய கள்ளக்குறிச்சி தேவராஜ் கைது!

Meenakshi
May 31, 2024,01:41 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சிறிது நேரத்திலேயே மிரட்டல் விடுத்த தேவராஜ் என்பவரை போலீஸாார் கைது செய்தனர்.


சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில்  மிரட்டல்  வந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போனில் வந்த தகவல் புரளி என்று தெரிய வந்தது.




இந்நிலையில் போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். அவரது பெயர் தேவராஜ். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதே பாணியில் கடந்த சில நாட்களாகவே மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது சகஜமாகி விட்டது.  ஆளுநர் மாளிகைக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.