பெரிய பாடிபில்டராகணும்.. "காசையும், காந்தத்தையும் முழுங்கு"...  வயிறு வலிச்சு..துடிச்சுப் போன இளைஞர்

Meenakshi
Feb 27, 2024,03:33 PM IST

டெல்லி: நாணயங்கள் மற்றும் காந்தங்களில் உள்ள துத்தநாகம் பாடி  பில்டிங்கிற்கு உதவும் என நம்பி 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய விபரீத சம்பவம் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.


டெல்லியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வாந்தி மற்றும் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபருக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் வயிற்று வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறப்பட்டது. மேலும், அவரால் எதுவும் சாப்பிடவும் முடியவில்லை என்று மருத்துவரிடம் தெரிவித்தனர். 


அப்போதுதான், கடந்த 20, 22 நாட்களுக்கு முன்பு அவர் நாணயங்கள் மற்றும் காந்தங்களை உட்கொண்டதாக அவரது உறவினர்கள் மருத்துவரிடம் தெரிவித்தனர். மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ்ரே செய்து பார்த்த போது அவரது வயிற்றில்  நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.




இதில் அவரது வயிற்றில், நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  டாக்டர்கள் குழு சுமார் 2மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர். இளைஞரின் குடலில் சிக்கியிருந்த 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை வெற்றிகரமாக அகற்றினர். 


அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால்  டிசார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின் போது 1,2 மற்றும் 5 ரூபாய் மதிப்புள்ள 39 நாணயங்களும், ஹார்டீன், கோளம், நட்சத்திரம், புல்லட் மற்றும் முக்கோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் 37 காந்தங்களும் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டன என மருத்துவர்கள் தெரிவித்தனர். 


ஏன் அவற்றை உட்கொண்டீர்கள்  என்று கேட்டபோது, அந்த நபர் டாக்டரிடம் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாணயங்களில் இருக்கும் துத்தநாகம் உடலை கட்டமைக்க உதவுகிறது என்றும் காந்தம் நாணயம் ஆகியவை இருந்தால் அவை துத்தநாகத்தை உறிஞ்சி உடல் கட்டமைப்பாக மாறும் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார். 


இந்த நாகரீக உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள். என்ன கொடுமை சரவணா இது... தெளசன்ட் பெரியார் வந்தாலும்.. ம்ஹூம்.. முடியவே முடியாது போலயே!