இலங்கையில் மரணமடைந்த.. பின்னணிப் பாடகி பவதாரணி உடல் இன்று மாலை சென்னை வருகிறது

Su.tha Arivalagan
Jan 26, 2024,09:10 AM IST

கொழும்பு: இலங்கை மருத்துவமனையில் மரணமடைந்த பினனணிப் பாடகி பவதாரணியின் உடல் இன்று மாலை சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.


இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி. 47வயதான அவருக்கு திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. தந்தையைப் போலவே இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகியாகவும் வலம் வந்தவர் பவதாரணி.


அவருக்கு புற்று நோய் இருந்துள்ளது. இதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் இலங்கை கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. பவதாரணியின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




விஜயகாந்த் மறைந்த சோகத்திலிருந்தே இன்னும் தமிழகம் மீளாத நிலையில் பவதாரணியின் மறைவை யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தற்போது இளையராஜா கொழும்பில்தான் இருக்கிறார். அவரது இசை நிகழ்ச்சி கொழும்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அவர் கொழும்பு வந்திருந்தார்.


மகள் மறைவுச் செய்தியைக் கேட்டதும் இளையராஜா மருத்துவமனைக்கு விரைந்தார். பவதாரணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும். இன்று மாலை உடல் சென்னைக்கு கொண்டு வரப்படவுள்ளது.


சென்னை கொண்டு வரப்படும் பவதாரணியின் உடல் தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறலாம் என்று தெரிகிறது.