ப்ளூடூத் ஹெட்போனில்.. பாட்டு கேட்டபடி தூங்கிய முதியவர்.. படாரென வெடித்து காது படுகாயம்!

Meenakshi
Jun 03, 2024,04:11 PM IST

சிவகங்கை: சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கோட்டுக்கொண்டு தூங்கியவரின் காதில் இருந்த ஹெட்போன் வெடித்ததில் முதியவர் காது படுகாயம் அடைந்தது.


இன்றைய நவீன காலத்தில் பல டெக்னாலஜிக்கள் வந்துவிட்டன. இந்த டெக்னாலஜி வளர்ச்சியினால் பல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதனை நாம் மறுக்கமுடியாது. டெக்லாஜியை சரியான முறையில் பயன்படுத்தாமல் அவரவர்களுக்கு எற்றார் போல் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.


 


குறிப்பாக, நம்மில் பெரும்பாலானவர்கள் பல நேரங்களில் மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டர்களில் ஹெட்போன்கள் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் முக்கியமாக போனை ஜார்ஜ் போட்டுக்கொண்டே பேசியும் வருகிறோம். இவ்வாறாக பாதுகாப்பற்ற முறையில் மின்னனு சாதனங்களை பயன்படுத்துவதினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்படி தான் தற்பொழுது ஒரு சம்பவம் நடந்துள்ளது. எங்கு தெரியுமா?


சிவகங்கையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது மாத்துக்கண்மாய் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் விவசாயி பன்னீர்செல்வம். இவர் தினமும் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி தான் அவர் தூங்கும் போது ஹெட்போனை ஆன் செய்து விட்டு பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியுள்ளார். 


அப்பொழுது திடீர் என ஹெட்போன் வெடித்தது. இந்த விபத்தில் முதியவரின் காதுகள் பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததினால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.