உதயநிதியிடம் தானே பேசுகிறார்.. ஏன் குறுக்கே சென்று இடையூறு செய்கிறீர்கள்?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

Meenakshi
Dec 06, 2023,06:54 PM IST

சென்னை: கனமழையால் தான் பட்ட கஷ்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கூற வரும்  பள்ளி ஆசிரியரிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று அமைச்சர் உதயநிதி கேட்டிருக்க வேண்டும் என்று புளுசட்டை மாறன் கூறியுள்ளார்.


மிச்சாங் புயல் எந்த சேதத்தையும் மிச்சம் வைக்காமல் கொடுத்து விட்டுப் போனதால், சென்னைவாசிகள் ஏடாகூடமாக சிக்கித் தவித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ஓரே அவல நிலை, என்ன கூறுவதென்றே தெரியவில்லை. இந்த நிலையில்,  சாமி வரம் தந்தாலும் பூசாரி வரம் தர மாட்டார் என்பது போல குறை கேட்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் குறை கூற முயன்ற ஆசிரியையை திமுகவினர் தடுத்த செயல் சர்ச்சையாகியுள்ளது.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மழை தொடங்கியதில் இருந்து ஓடி ஓடி தான் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார். அவர் என்ன செய்தாலும் உடன் இருப்பவர்கள் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை வைத்து திரைப்பட விமர்சகர் ப்ளுசட்டை மாறன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 






இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கனமழையால் தான் சந்தித்த இன்னல் குறித்து புகார் அளிக்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர். வெறும் வாய் புகாராக மட்டுமின்றி மனுவும் அளிக்கிறார். யாருக்கெல்லாம் போன் செய்து உதவி கேட்டோம் என்றும் ஆதாரமும் தருகிறார். அனைத்தையும் பொறுமையாக நின்று கேட்கிறார் உதயநிதி. ஆனால் சிலர் அந்த வயதான பெண்மணியை பின்பக்கமாக இழுக்கிறார்கள். அமைச்சர் மா.சுப்ரமணியம்.. அவரை உதயநிதியிடம் மேலும் சில நிமிடம் பேச செய்திருக்கலாம்.


'என்ன தீர்வு வேண்டும்?' என கேட்கிறார் மா.சு. ஆனால் 'வாம்மா, இரும்மா' என ஒருமையில் அழைத்தது தவறு. அமைச்சர் நேரு 'அவ்வளவு நேரமெல்லாம் பேச முடியாது' எனக்கூறி நகர்கிறார். அப்பெண்மணி பேசியதே ஒன்றரை நிமிடம்தான்.  அதை ஏன் தடுக்க பார்க்கிறீர்கள்? அவர் உதயநிதியிடம்தானே பேசுகிறார்? நீங்கள் ஏன் குறுக்கே சென்று இடையூறு செய்கிறீர்கள்? 


அவர் இன்னும் சிலநிமிடம் பேசியதும் 'உரிய தீர்வு காண்கிறோம்' என உதயநிதி கூறி, அதை செயலிலும் காட்டியிருந்தால்.. குறைந்தபட்ச நற்செயலாக இருந்திருக்கும். இனி இப்படியான நிகழ்வு. தன்னை சுற்றியுள்ள கட்சியினரால்.. நடக்கவிடாமல் உதயநிதி தடுத்தாக வேண்டும். இந்த ஆசிரியையை பின்பக்கமாக இழுத்த நபர்களையும் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


புளுசட்டை மாறன் கேள்விக்கு பலர்  ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், உதயநிதியின் மேல் எந்த தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.