டெல்லி சிஆர்பிஎப் பள்ளியில் பலத்த சப்தம்.. வெடித்தது வெடிகுண்டா?.. தடயவியல் அதிகாரிகள் தீவிர ஆய்வு

Su.tha Arivalagan
Oct 20, 2024,11:24 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளியை ஒட்டிய பகுதியில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்தது என்ன என்று தீவிர ஆய்வில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பள்ளியின் சுற்றுச் சுவர் லேசான சேதத்தை சந்தித்தது.  டெல்லி போலீஸ் குழுவினரும் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதுதொடர்பான ஒரு வீடியோவை அந்தப் பகுதியில் வசிக்கும் யாரோ சிலர் சமூக வலைதளங்களில் போட்டுள்ளனர். அதில் வெடித்த பிறகு பெரும் புகை மூட்டம் எழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், வீட்டில் இருந்தபோது பலத்த வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது பள்ளி வளாகத்திலிருந்து பெரும் புகை வந்து கொண்டிருந்தது. அதை வீடியோவாக எடுத்தேன். அதற்கு மேல் எனக்குத் தெரியாது என்றார்.




இன்று காலை ஏழே முக்கால் மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  இதுவரை சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் அங்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இந்த வெடிச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. கடைகளில் உள்ள பெயர்ப் பலகைகள் சிலவும் கூட சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பள்ளி வளாகத்தைத் தாண்டி சற்று தொலைவில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் சேதமடைந்துள்ளதால் வெடித்தது சற்று சக்தி வாய்ந்த பொருளாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.


நாட்டு வெடிகுண்டு ஏதேனும் வெடித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடந்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்