தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நசகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதன் பணிகளை விறுவிறுப்பாக செய்ய தொடங்கி விட்டது. இந்நிலையில் மத்தியில் இருக்கும் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் பணிகளை செய்யத்தொடங்கிய நிலையில், பாஜகவினர் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாதகவை கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சென்று சந்தித்து பேசியிருந்தார் என்றும், அதன் பின்னர் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசியும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். இந்த இரு நிகழ்ச்சிகளால் பாஜகவுடன் நாதக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்காக நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த அழைப்பை சீமான் ஏற்பாரா? அல்லது முந்தைய தேர்தல்களை போலவே நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.