தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
செங்கல்பட்டு: தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பங்கேற்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியலில் தனிபெரும் தலைவராக சீமான் திகழ்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.ஆர்.எம். தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் செல் தமிழா செல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளின் பேச்சு திறனை வளர்க்கும் விதமாக பேச்சு பேட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த இறுதிச்சுற்று போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் தனி அறையில் சந்தித்து பேசியுள்ளார்கள். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், அண்ணன் சீமான் ஒரு தளபதி. ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட ஒரு போர்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாகத் தான் அண்ணன் சீமான அவர்களை பார்க்கிறேன். காரணம் அவருடைய கொள்கை. கொள்கையில் அவர் கொண்டுள்ள உறுதி பூண்ட நிலைப்பாடு. அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற தைரியம். போர்களத்திலே போராடக்கூடிய மாண்பு. எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தைரியம் என்பது பயம் இல்லை என்பது அல்ல. ஓரிடத்தில் நிற்கும் போது, நம்முடைய பயத்தை மறைத்து நிற்பது. எப்பொழுதும் தொடர்ந்து அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க காரணம் என்னவென்றால், நேர்மையும், நெஞ்சுஉறுதியும் கொண்டவராக இருப்பவர் அண்ணன் சீமான். நாங்கள் இருவரும் பங்கேற்கும் முதல் மேடையாக இருப்பதால் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பங்கேற்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.