தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால்தான் வளர முடியும்.. பாஜகவுக்கு சாமி அட்வைஸ்

Su.tha Arivalagan
Feb 11, 2023,12:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிப் பணிகளை இன்னும் செய்யவே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் அது தனித்துப் போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அது வளர முடியும் என்று சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.


பாஜகவில் உள்ள மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை விமர்சித்துக் கருத்துக்களைக் கூறுவது வழக்கம். குறிப்பாக நிர்மலா சீதாராமன் போன்ற தலைவர்களை கடுமையாக விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் சென்னை வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறுகையில், தமிழ்நாட்டில் தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக பெரிதாக எதையும் செய்யவில்லை. கட்சி வளர வேண்டும் என்றால் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும். அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் தொண்டர் பலம் அதிகரிக்கும். மக்களிடம் நம்பிக்கை உருவாகும். வளர முடியும்.


ஆனால் இங்கு என்ன செய்கிறார்கள்.. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இது வளர உதவாது. பிற மாநிலங்களில் அப்படி இல்லை. தைரியமாக தனித்து போட்டியிடுகிறார்கள். கட்சியை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இங்கு அப்படி எதுவும் இல்லை.


அடுத்த பிரதமர் யார் என்பதை பாஜகதான் அறிவிக்க வேண்டும். மோடிதான் மீண்டும் பிரதமரா என்பதை இப்போதே கூற முடியாது. அதை பாஜக மேலிடம்தான் அறிவிக்க வேண்டும் என்றார் சாமி.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது குறித்துக் கேட்டபோது, காங்கிரஸுக்கு இருக்கிற வாக்குகளும் கிடைக்காமல் போகப் போகிறது என்றார் சாமி.