முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல்வர்.. 2 முறை இருந்த வசுந்தராவுக்கு ஸாரி!

Su.tha Arivalagan
Dec 12, 2023,06:37 PM IST
ஜெய்ப்பூர்:   2 முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்தவரும், மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு பறி போய் விட்டது. அவருக்குப் பதில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை, ராஜஸ்தான் முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. இதில் ராஜஸ்தான், சத்திஸ்கரில் காங்கிரஸை காலி செய்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அதேசமயம், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

வெற்றி என்னவோ எளிதாக வந்து விட்டது. ஆனால் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்குள்தான் போதும் போதுமென்றாகி விட்டது பாஜகவுக்கு. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சத்திஸ்கர், மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தடுத்து முதல்வர்களைத் தேர்வு செய்தது பாஜக. இந்தந நிலையில் இன்று ராஜஸ்தான் முதல்வரையும் முடிவு செய்தது பாஜக.



ஜெய்ப்பூரில் இன்று நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஜன்லால் சர்மா பெயரை, மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா முன்மொழிந்தார். இதையடுத்து அவர்  சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கனீர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பஜன்லால் சர்மா. இவர் இப்போதுதான் முதல் முறையாக சட்டசபைக்குத் தேர்வாவாகியுள்ளார். கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார். 

முன்னதாக, முதல்வர் பதவிக்கு வசுந்தரா ராஜே கடுமையாக மோதி வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதுமுகத்தை முதல்வராக்கியுள்ளது பாஜக. இதனால் வசுந்தரா தரப்பு ஏமாற்றமடைந்துள்ளது.

இதில் விசேஷம் என்னவென்றால் மத்தியப் பிரதேசத்திலும் சரி, ராஜஸ்தானிலும் சரி, சத்திஸ்கரிலும் சரி முன்னாள் முதல்வர்கள், சீனியர்களுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக இளைய தலைமுறைக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலத்தில் பாஜகவில் முதல்வர் பதவிகள் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் அடுத்த தலைமுறைக்கு மாறப் போவதற்கான கட்டியமாக இது பார்க்கப்படுகிறது.