தமிழ்நாட்டில் 20 இடங்களில் பாஜக போட்டி.. இன்று மாலை வேட்பாளர் பட்டியல்.. அண்ணாமலை அறிவிப்பு!

Manjula Devi
Mar 21, 2024,07:17 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான  பங்கீடு முடிந்துள்ள நிலையில், இன்று மாலை  தொகுதி பங்கீடுக்கான வேட்பாளர் பட்டியலை  டெல்லியில் இருந்து அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில்  திமுக மற்றும் அதிமுக ஏற்கனவே தொகுதி பங்கீட்டை முடித்து தற்போது எந்தத் தொகுதியில்.. எந்த வேட்பாளர்கள்..  போட்டியிடுவார்கள் என்ற வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.




புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, இ.ம.க.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் கட்சிக்கு  3 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.


இது பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,


லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான தொகுதி பங்கீடு இன்று முடிந்துள்ளது. இதில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும் கூட்டணி கட்சிகள்  தாமரை சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை டெல்லியில் இருந்து கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பாஜக சார்பில் கூட்டணிக் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார்கள். 


பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் , டிடிவி தினகரன் அணி, உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த அறிவிப்பை அவர்களே விரைவில் அறிவிப்பார்கள்‌ என தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை பாஜக தரப்பில் அளிக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டில் ஒரு தொகுதி கூட ஓபிஎஸ் தரப்பினருக்கு ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.