கைது பூச்சாண்டிக்கெல்லாம் பாஜகவினர் பயந்து பின்வாங்க மாட்டார்கள்.. அண்ணாமலை ஆவேசம்
சென்னை: கைது பூச்சாண்டிக்கெல்லாம் பாஜகவினர் பயந்து பின்வாங்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இதனைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இன்று பலரையும் சந்தித்து கையெழுத்து வாங்கக் கிளம்பினார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழ்நாடு பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?
தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என்று அவர் கேட்டுள்ளார்.