ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் ஆன்லைனில் ஜிலேபி ஆர்டர் செய்த பாஜக.. ரொம்பத்தான் குசும்பு!

Su.tha Arivalagan
Oct 09, 2024,10:50 AM IST

டெல்லி:   ஹரியானா சட்டசபைத் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்றிருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் ஜிலேபி ஆர்டர் செய்து கலாய்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 3வது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ் வெல்வது போல தோற்றம் வந்தது. ஆனால் திடீரென என்ன நடந்ததோ டோட்டலாக முடிவுகள் அப்படியே மாறி விட்டன. பாஜகவுக்கு சாதகமான முறையில் முடிவுகள் மாறி பாஜக வென்று விட்டது.


இந்த வெற்றியை பாஜகவினர் அங்கு தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியிலும் பிரதமர் மோடியை சந்தித்து பாஜக தலைவர் ஜே. பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், இனிப்பு கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.




இந்த நிலையில் தங்களது வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸை வித்தியாசமாக கலாய்த்துள்ளது பாஜக. அதாவது ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் ஒரு கிலோ ஜிலேபி ஆர்டர் செய்துள்ளது பாஜக. இதற்குக் காரணம் உள்ளது.


ஹரியானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்தபோது கோஹனா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது நாடு முழுவதும் இங்கிருந்துதான் ஜிலேபி தயார் செய்து விற்பனையாகிறது. இந்த ஊரில் தயாரிக்கப்படும் ஜிலேபி அவ்வளவு பிரசித்தமானது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் இங்குள்ள ஜிலேபி தயாரிப்பாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று சாடியிருந்தார்.


இதனால்தான் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் அலுவலகத்திற்கும் ஜிலேபியை ஆர்டர் செய்து பாஜக கிண்டல் செய்துள்ளது. ஹரியானா மாநில பாஜகவினர் சார்பாக ராகுல் காந்தி வீட்டுக்கும், காங்கிரஸ் அலுவலகத்திற்கும் ஜிலேபி அனுப்பி வைத்துள்ளோம் என்று பாஜக சார்பில் டிவீட்டும் போடப்பட்டுள்ளது. அதில் ஜிலேபி ஆர்டர் செய்ததையும் ஸ்கிரீன்ஷாட் செய்து இணைத்துள்ளனர்.


தற்போது விவாதப் பொருளாகியுள்ள கோஹனா ஜிலேபியானது கடந்த 1958ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் இதை விற்பனை செய்தவர் மாட்டு ராம் என்பவர்தான். இவரது தயாரிப்புதான் இப்போது வட இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளது. இவரது பேரப் பிள்ளைகள் இப்போது இந்த ஜிலேபி தொழிலை பார்த்து வருகின்றனராம்.


இதுகுறித்து பேரப் பிள்ளைகளில் ஒருவரான ராமன் குப்தா என்பவர் கூறுகையில் சுத்தமான பசும் நெய்யில்தான் இந்த ஜிலேபியை தயாரிக்கிறோம். மென்மையாகவும், அதேசமயம், சுவையாகவும் இருக்கும். ஒரு ஜிலேபி 250  கிராம் எடையுடன் இருக்கும்.  ஒரு டப்பாவில் நான்கு ஜிலேபிகள் இருக்கும். ஒரு கிலோ ஜிலேபி ரூ. 320க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்