சர்வீஸுக்குப் போன இடத்தில்.. ஜே.பி. நட்டா மனைவியின் பார்ச்சூனர் கார்.. துணிகர திருட்டு.. டெல்லியில்

Su.tha Arivalagan
Mar 25, 2024,07:20 PM IST

டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் மனைவி பயன்படுத்தி வந்த டொயோட்டோ பார்ச்சூனர் கார் திருட்டு போயுள்ளது.


ஜே.பி. நட்டாவின் மனைவி டாக்டர் மல்லிகா நட்டா ஒரு பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் டிரைவராக இருப்பவர் ஜோகிந்தர். மார்ச் 19ம் தேதி காரை சர்வீஸ் விடுவதற்காக தென் கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்தபுரி பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்து வந்துள்ளார் ஜோகிந்தர்.


சர்வீஸ் சென்டருக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது காரைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது கார் திருட்டுப் போனது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். 




போலீஸார் உடனடியாக சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்துப் பார்த்தபோது அந்தக் கார் குருகிராம் நோக்கிப் போனது தெரிய வந்தது. இருப்பினும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்தக் கார் எந்தப் பக்கமாக போனது என்று கண்டுபிடிக்க முடியில்லை. தொடர்ந்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கார் இமாச்சல் பிரதேச மாநில பதிவெண் கொண்டதாகும்.


டெல்லியில் பட்டப் பகலில், பாஜக தேசியத் தலைவர் மனைவியின் காரே திருட்டு போனதால் டெல்லி காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. காணாமல் போன காரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.