இந்த பாலைக் குடிங்க.. அதை தூக்கிப் போடுங்க.. குடிகாரர்களை அதிர வைத்த உமா பாரதி

Su.tha Arivalagan
Feb 03, 2023,01:08 PM IST
ஆர்ச்சா, மத்தியப் பிரதேசம்:  மத்தியப் பிரதேச மாநிலம் ஆர்ச்சாவில் உள்ள மதுக் கடைக்கு பசு மாட்டுடன் வந்த மூத்த பாஜக தலைவர் உமா பாரதி, அங்கு வந்த குடிகாரர்களிடம், மது அருந்தாதீங்க. பசும்பால் குடிங்க, அதுதான் உடம்புக்கு நல்லது என்று அறிவுரை கூறியதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



மதுப் பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து  வ ருகிறார் உமா பாரதி. இந்த நிலையில் ஆர்ச்சா நகரில் உள்ள ஒரு மதுக் கடைக்கு சில பசு மாடுகளுடன் அவர் வந்தார். அங்கு மாட்டை மரத்தில் கட்டிப் போட்டு வைக்கோல் கொடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அங்கு குடிக்க வந்தோர் குழப்பமடைந்தனர்.

அவர்களிடம், உடம்பைக் கெடுத்து உயிரைக் குடிக்கும் இந்த மதுவை கைவிடுங்கள். பசும்பால் சாப்பிடுங்கள். உடம்புக்கும் நல்லது, நீண்ட ஆயுளோடும் வாழலாம். குடும்பமும் நல்லபடியாக இருக்கும். குடும்பத்தை அழித்து உயிரைக் குடிக்கும் குடிப் பழக்கத்தைக் கைவிடுங்க என்று கேட்டுக் கொண்டார்.

ஆர்ச்சா நகரமானது , நிவாரி மாவட்டத்தில் உள்ளது. இந்த  ஊர் கோவில்களுக்கும், அரண்மனைக்கும பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்படித்தான் இதே மதுக் கடைக்கு வந்த உமா பாரதி அந்தக் கடை மீது சாணியை வீசி கடையை மூடுமாறு போராட்டம் நடத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்த சம்பவம் போல மீண்டும் நடந்து விடாமல் தடுக்க கடைக்காரர், உடனடியாக மதுக் கடையை மூடி விட்டார்.  அதேபோல, போபாலில் உள்ள மதுக் கடையை மூடக் கோரி கல்வீச்சிலும் இறங்கி அதிரடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் முழு மது விலக்கு கோரி வந்தார் உமா பாரதி. இருப்பினும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மது விற்பனையை ஒழுங்குபடுத்துமாறு கோரி வருகிறார். காரணம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வரவுள்ளது என்பதால் உமா பாரதி, குடிகாரர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அது பாஜகவுக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.