அண்ணாமலை மாற்றப்படுவாரா.. யார் தலைவர்.. அவரா, இவரா? .. ரீல் சுத்தாதீங்க.. திருப்பதி நாராயணன்!

Su.tha Arivalagan
Aug 06, 2024,06:27 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்படுவாரா என்ற விவாதத்தை விட்டு உருப்படியான விஷயங்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் இதுதான் விவாதமாக உள்ளது. நைனார் நாகேந்திரன் புதிய தலைவராகப் போகிறார் என்றும், இல்லை இல்லை வானதி சீனிவாசன் தான் அடுத்த தலைவர் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.


இந்த நிலையில் இதுகுறித்து நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




அண்ணாமலை மாற்றப்படுவாரா? அப்படியானால் யார் தலைவர்? அவரா? இவரா?  என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர் பாஜக அல்லாத மற்ற கட்சியினர். அண்ணாமலையை சுற்றியே இவர்களின் சிந்தனை இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இது குறித்து சிந்திக்க வேண்டியது பாஜகவினர் தானேயன்றி மற்ற கட்சியினர் அல்ல. 


தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி குறித்து எந்த அளவிற்கு மிரண்டு போயுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது இந்நிலை. குறிப்பாக அண்ணாமலை அவர்களை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. தி மு க ,காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை போல குடும்ப கட்சியோ அல்லது ஒரு நபர் சார்ந்த கட்சியோ அல்ல பாஜக. திறமைக்கும், திறன் மிகுந்தவர்களுக்கும் பஞ்சமே இல்லாத கட்சி பாஜக. பொழுது போகவில்லையென்றால் சொந்த கட்சி கோஷ்டி பூசலை தீர்க்க முயற்சி செய்யட்டும்; அதைவிடுத்து, பாஜக விவகாரங்களில் தலையிட்டு மூக்கறுபட்டு ஏன் நிற்க வேண்டும்?


யார் தலைவராக இருக்க வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? எப்போது மாற்ற வேண்டும்? எங்கு மாற்ற வேண்டும்? எப்படி மாற்ற வேண்டும்? மாற்ற வேண்டுமா, இல்லையா? என்பதையெல்லாம் பாஜக தலைமை முடிவு செய்யும். அதுவரை இந்த ரீல் சுத்துற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நல விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் சில ஊடகங்கள் என்று அவர் கூறியுள்ளார்.