"இந்தப் பழம் புளிக்கும்".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலிருந்து நழுவுகிறது பாஜக..?

Su.tha Arivalagan
Jan 24, 2023,12:49 PM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுகவிடம் தொகுதியை கொடுத்து விட்டு பாஜக பிரசாரத்தோடு நிறுத்திக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.



ஈரோடு கிழக்கில் போட்டியிட அண்ணாமலைக்கும் விருப்பம் இல்லையாம், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் கூட விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் அண்ணாமலை உள்ளார். இருப்பினும் கட்சித் தலைமை இதுதொடர்பாக எடுக்கும் முடிவுக்காக மாநிலத் தலைமை காத்திருக்கிறதாம்.

நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது. கூட்டணியில் வலுவாக இருக்கிற கட்சிதான் போட்டியிட வேண்டும். கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி என்று கூறியிருந்தார். இதன் மூலம் மறைமுகமாக அதிமுகதான் போட்டியிடும் என்று அண்ணாமலை உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அதிமுக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் பலம் மட்டும் போதாது, கூடவே ஓ.பி.எஸ்ஸும் இணைய வேண்டும். தினகரனும் வர வேண்டும், சசிகலாவும் சேரவேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அப்போதுதான் அதிமுகவுக்கு பழைய பலம் திரும்பக் கிடைக்கும். அதுதான் திமுகவை எதிர்க்க சரியாக இருக்கும் என்பது பாஜகவின் கருத்து. ஆனால் எடப்பாடி இறங்க வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கில் பாஜகவுக்கு நிலைமை சரியில்லை என்று உள்ளூர் தலைவர்கள் மாநிலத் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவுகிறது. இப்போது போட்டியிடுவது சரியாக இருக்காது. கள நிலவரம் நமக்கு சாதகமாக இல்லை. திமுகவை எதிர்க்க அதிமுகதான் சரியான கட்சி. இப்போது நாம் போட்டியிட்டு பெரும் தோல்வியைச் சந்தித்தால் அது 2024 லோக்சபா தேர்தலுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று அவர்கள் எடுத்துச் சொல்லியதைத்தொடர்ந்தே அண்ணாமலை தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டதாக சொல்கிறார்கள்.

பாமகவைப் போல நாமும் பேசாமல் இடைத் தேர்தலிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று பாஜகவின் பல்வேறு தலைவர்களும் கருதுகிறார்களாம். அதுதான் நமக்கு நல்லது என்பது அவர்களது எண்ணமாகும்.  கிட்டத்தட்ட அண்ணாமலையும் கூட அதே கருத்தில்தான் இருப்பதாக சொல்கிறார்கள்.  பொறுத்திருந்து பார்ப்போம், பாஜக என்ன முடிவு எடுக்கிறது என்பதை.