வருத்தப்பட்ட பிரேமலதா.. "அட ஆமாப்பா".. தேமுதிக பக்கம் திரும்பிய பாஜக!

Su.tha Arivalagan
Jul 26, 2023,03:45 PM IST

சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவங்க உள்ள பாதயாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ள வருமாறு தேமுதிக கட்சிக்கு, பாஜக சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தேமுதிக உடனான கூட்டணியை புதுபிக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.




2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக.,வின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ஜூலை 28 ம் தேதி பாதயாத்திரை செல்ல உள்ளார். மொத்தம் 110 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் துவங்கி, சென்னையில் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதயாத்திரை 5 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.


முதல் கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல உள்ளார். சென்னையில் நிறைவடையும் இந்த பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 


ஜூலை 28 ம் தேதி துவங்க உள்ள அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.


சமீபத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு போட்டியாக தங்களின் கூட்டணி பலத்தை நிரூபிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி கட்சிகளை அழைத்து டில்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. ஆனால் இந்த கூட்டத்திற்கு தேதிமுக.,விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தாங்கள் எந்த கட்சியின் கூட்டணியிலும் இல்லை. ஆலோசனை கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பும் வரவில்லை. நாங்கள் கூட்டணியிலேயே இல்லாதபோது எப்படி அழைப்பார்கள் என்று கூறியிருந்தார்.


என்னதான் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல பேசியிருந்தாலும் கூட உள்ளூற பாஜக அழைக்காமல் விட்டது தேமுதிக தரப்புக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதாகவே கூறப்படுகிறது. காரணம், விஜயகாந்த் நலமாக இருந்தசமயத்தில், பாஜக கூட்டணியில் இணைந்தபோது அதற்குரிய மரியாதையைக் கொடுத்திருந்தார். பாஜக தலைவர்களுடன் நல்ல உறவிலும் இருந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்த்தை பாஜக மறந்து விட்டதே என்ற வருத்தம் கட்சித் தொண்டர்களுக்கும் கூட இருக்கிறது.


இந்நிலையில்தான் இன்று அவசரமாக சென்று தேமுதிக.,விற்கு அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது பாஜக. இந்த அழைப��பை தேமுதிக ஏற்கும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் தேமுதிக இடம் பெற வாய்ப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.