தமிழ்நாடு விரையும் பாஜக மேலிடக் குழு.. என்ன நடக்கிறது?.. 4 பேர் கமிட்டி அமைப்பு!

Su.tha Arivalagan
Oct 23, 2023,12:27 PM IST

சென்னை: பாஜக மேலிடம் சார்பில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அது தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. திமுக அரசு மீதான புகார்கள் உள்ளிட்டவை குறித்தும், தமிழ்நாடு பாஜகவினர் மீது பாயும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தறிய இந்தக் குழு சென்னை விரைகிறது


முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சதானந்த கெளடா, எம்.பி. பி.சி. மோகன் (இவரும் கர்நாடகாதான்), மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோரை பாஜக தேசிய பொதுச் செயலாளர் நியமித்துள்ளார். இந்தக் குழு தமிழ்நாடு சென்று ஆய்வு செய்து, மாநிலத் தலைமைக்கு அறிக்கை அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் தமிழ்நாட்டில் சந்தித்து வரும் அடக்குமுறைகள் குறித்து இவர்கள் விசாரணை நடத்தவுள்ளனர்.




இதுதொடர்பாக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:


திமுக அரசு 2021ம் ஆண்டு பதவிக்கு வந்தது மேதல் பாசிச அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரத்தை அதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு பாஜகவின் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், வழக்குகள் தொடரப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.


திமுக பிரமுகர்கள் கொடுக்கும் பெரும்பாலான புகார்களை அழுத்தங்கள், நிர்ப்பந்தங்கள் காரணமாக போலீஸார் எடுத்துக் கொண்டு வழக்குத் தொடுக்கிறார்கள். இவை பெரும்பாலும் உள்ளூர் அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்படுகின்றன.


நள்ளிரவு கைது, அதிகாலை கைது, கைது செய்யப்படுவோருக்கு அதற்குரிய 41ஏ சம்மன் அளிக்கப்படாதது, ஜாமீன் கிடைக்கும் நேரத்தில் புதிதாக வழக்குகள் பதிவு செய்வது, வார இறுதி நாட்களில் கைது செய்வது, நீண்ட விடுமுறை வரும் நேரத்தில் கைது செய்வது போன்றவை அடக்குமுறை திமுக அரசின் போக்காக உள்ளது.




சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பவர்களை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்தக் கைதுகள் செய்யப்படுகின்றன.  அதேசமயம், பாஜகவினர் கொடுக்கும் முறையான புகார்கள் மீது நடவடிக்கையே எடுப்பதில்லை. 


பாஜக மேலிடக் குழு அமைக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். இந்தக் குழுவினரின் ஆய்வின் மூலமாக, திமுக அரசு செய்து வரும் அதிகார துஷ்பிரயோகம் அம்பலத்திற்கு வரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.